தினமணி 15.09.2010
வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேயர் ஆலோசனை
மதுரை,செப்.14: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பருவமழை மற்றும் புயல் அபாயத்தின்போது மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் மேயர் தேன்மொழி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வைகைக் கரையோரப் பகுதிகள், மாடக்குளம் மற்றும் செல்லூர் பகுதிகளில் மழை காரணமாக தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த டீசல் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருத்தல், தாற்காலிகமாகத் தங்கும் மையங்களை அமைப்பது, மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தல், சாலைகளில் மரம் விழுந்தால் உடனுக்குடன் அகற்றத் தேவையான ஏற்பாடுகள் செய்தல்,ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், குடிநீரில் குளோரின் அளவைப் பரிசோதனை செய்தல்,அனைத்து வாகனங்களையும் பழுதில்லாமல் வைத்திருத்தல், வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மாநகராட்சிப் பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்தல்,உணவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது, கண்மாய், குளங்களில் தேங்கும் நீரை அருகிலுள்ள அணைக்குக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை ஆணையர் க. தர்ப்பகராஜ், மண்டலத் தலைவர்கள் க. இசக்கிமுத்து, வி.கே. குருசாமி, காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆர்வலர் இளங்கோ, மீனாட்சி மகளிர் கல்லூரி புவியியல் பேராசிரியை சேது ராக்காயி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.