Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு, அபராதம்

Print PDF

தினமலர் 16.09.2010

மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு, அபராதம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீரை திருடினால் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதமும் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாநகர் பகுதியில் 37 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. தற்போது வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து பெறப்படும் குடிநீர், விநியோகம் செய்யப்படும் நாட்களின் இடைவெளியை குறைப்பதற்காக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் தேவைக்கு போக அதிகமான குடிநீரை அடைக்காமல் வடிகால்களில் விடுவதும், கால்நடைகளை குளிப்பாட்டுவதும், தோட்டத்திற்கு பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர சட்டவிரோதமாக மின்மோட்டர் வைத்து குடிநீர் உறிஞ்சுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யும் நாட்களின் இடைவெளியை குறைக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீர் பிடித்த உடன் குழாயை அடைத்து வைக்க வேண்டும். மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் தாங்களே முன்வந்து மோட்டார்களை அகற்றிவிட வேண்டும். அதிகாரிகளின் திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டால், மின்மோட்டார் பறிமுதல் செய்வதுடன் சம்மந்தப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் அடுத்த குடிநீர் இணைப்பு குறைந்தது 6 மாத காலத்திற்கு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்