தினகரன் 17.09.2010
குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட17 மின் மோட்டார்கள் பறிமுதல்:நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி வீட்டுக் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 17 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சிப் பகுதியின் 4 மண்டலங்களிலும் பல வீடுகளில் குடிநீரில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் மண்டலப் பகுதி குலவணிகர்புரம், மாசிலாமணிநகர், ராஜா நகர், அக்பர் தெரு, சாயன் தரகன் தெரு, ஞானியரப்பா பெரிய தெரு, சிறிய தெரு மற்றும் 35வது வார்டு அனைத்து தெருக்களிலும் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 17 மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மோட்டார் பொருத்திய குடிநீர் இணைப்புக்கள் உடனடியாக துண்டிக்கப்பட்டன.
கமிஷனர் எச்சரிக்கை:குடிநீர் இணைப்புதாரர்கள் சட்ட விரோதமான மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவேண்டும். இதுபோன்ற மோட்டார் பொருத்தி சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சினால் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் திடீர் ஆய்வு செய்யப்படும். சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தியது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.