தினகரன் 21.09.2010
பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் தாமதமாக இணைப்பு பெற்றால் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் நகராட்சி தலைவர் தகவல்
தர்மபுரி, செப்.21: பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிந்த பின்னர், இணைப்பு பெற்றால் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும். எனவே பொது மக்கள் விரைவாக இணைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி தலைவர் கூறினார்.
தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 19 வார்டுகளில் முதல்கட்ட பணியாக ரூ24கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டப் பணியில் சேர ஒரு வீட்டுக்கு ரூ5
ஆயிரம் முன் பணமாக செலுத்த வேண்டும். ஆனால் சொந்த வீடுகள் உள்ளோர் பலர் இப்பணியில் சேராமல் உள்ளனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பின்னர் இணைப்புபெற்றால் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் போது, தங்கள் வீடுகளுக்கான இணைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகரமன்ற தலைவர் ஆனந்தகுமார் ராஜா கூறியதாவது:
தர்மபுரி நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணியில் இணைப்பு பெற அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானோர் இதுவரை இணைப்பு பெற முன்பணம் செலுத்தவில்லை. ஒரு இணைப்புக்கு ரூ5 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். 6 ஆயிரம் இணைப்புகள் மூலம் ரூ3 கோடி வசூலிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இதுவரை ரூ12 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டப் பணிகள் ஒரு சில வார்டுகளில் மட்டும் முடிந்துள்ளது. சில வார்டுகளில் இன்னும் நடந்து வருகிறது. இதனால் வார்டுகளில் பணிகள் நடக்கும் போதே இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கான தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி இணைப்பை பெறலாம். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பின்னர் இணைப்பு பெற விண்ணப்பத்தால், கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும். எனவே நகராட்சி பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவனத்தினர் உரிய தொகையை செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.