தினமலர் 22.09.2010
நெல்லை, பாளை., பகுதி வீடுகளில் ரெய்டு 26 குடிநீர் மின் மோட்டார்கள் பறிமுதல்
திருநெல்வேலி : நெல்லை, பாளை., பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டிருந்த 26 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் பாளை., மண்டலத்தில் மிலிட்டரி லைன் தெரு, கிருபாகரன் தெரு, பேரின்பதெரு, எல்லாம் வல்லவன் தெரு, சிவன் கோயில் கீழத் தெரு, சிவன்கோயில் வடக்கு ரதவீதி, பிச்சுவனத் தெரு, கடிகார ஆசாரி தெரு, முனையாடுவார் நயினார் தெரு, கோட்டூர் ரோடு மற்றும் தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை, செல்விநகர் பகுதிகளிலும் வீட்டுக் குடிநீர் இணைப்புக்கள் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் 26 வீடுகளில் குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மோட்டார் பொருத்திய இணைப்புக்கள் உடனடியாக துண்டிக்கப்பட்டன.
கமிஷனர் எச்சரிக்கை : குடிநீர் இணைப்புதாரர்கள் சட்ட விரோதமான மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவேண்டும். மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கமிஷனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.