தினமலர் 23.09.2010
மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஜப்பான் வங்கிக்குழு நேரில் ஆய்வு
திருச்சி: திருச்சி மாநகராட்சி மாநகராட்சியில் நடக்கும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை, அத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்கும் ஜப்பான் நாட்டு வங்கி பிரதிநிதி குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், ஜப்பான் நிதி நிறுவன உதவி மாநில அரசு மானியம், மாநகராட்சி பங்களிப்பு ஆகியவை சேர்த்து, 169 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவித்தி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
ஸ்ரீரங்கம், மேலூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் இப்பணிகளை, ஜப்பான் வங்கி பிரதிநிதிகள் சேனோ, இட்டோ மற்றும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குழுவினர் திட்டப் பணியில மூன்று இடத்தில் அமைத்துள்ள பிரதான நீர் சேகரிக்கும் கிணறு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணி, 52வது வார்டு ஆனந்தம் நகர், சுப்பிரமணி நகரில நடந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.
பணிகள் முன்னேற்றம் குறித்து குழுவினர் மாநகராட்சி அலுவலகம் ஆலோசனை நடத்தினர். மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, உலக ஒற்றுமைக்கான ஜப்பான் வங்கி இந்திய பிரதிநிதி மற்றும் முதுநிலை மேம்பாட்டு வல்லுநர் மிகிர் சோர்டி, நகர் உள்கட்டமைப்பு நிதி வசதி சேவை கழக உதவித் துணைத் தலைவர் ராஜந்திரன் உடனிருந்தனர்.