தினகரன் 24.09.2010
குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல், செப். 24; குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வத்தலக்குண்டு பெரியகுளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம்(60). இவர் திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றதில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது வீட்டிற்கு சேவுகம்பட்டி பேரூராட்சியில் இரண்டு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். குடிநீர் இணைப்புக்கு ரூ.10ஆயிரம் போக தனிப்பட்ட முறையில் அலுவலக செலவிற்கு அதிகாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் கொடுத்து குடிநீர் இணைப்பு பெற்றேன். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டது.
இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாக ஊழியர்களிடம் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபாலன், 31ம் தேதிக்குள் நாகரத்தினத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் அவரது மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.2 ஆயிரமும் பேரூராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.