தினகரன் 27.09.2010
வரி செலுத்தாத வீடுகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நெல்லை, செப். 27: வரிசெலுத்தாத வீடுகள் மற்றும் கடைகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர், உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட கட்டிடங்களுக்குரிய செத்துவரி, குடிநீர் கட்டணம், மாநகராட்சி கடைகளுக்கான குத்தகை தொகை மற்றும் இதர வரியினங்களை நிலுவையின்றி செலுத்த பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாளை மண்டலத்தில் புதுப்பேட்டை, ராஜேந்திரநகர், பெருமாள் மேலரதவீதி, மாடத்தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, சீனிவாசநகர், கவிதாநகர், வி.எம்.சத்திரம், பெரியார்நகர், செயின்ட் பால்ஸ்ரோடு, திருச்செந்தூர்ரோடு, சொக்கலிங்கம் சுவாமி கோயில் தெரு, சீவலப்பேரி ரோடு, செந்தில் நகர், குலசேகர ஆழ்வார்தெரு, சிவன் கோயில் தெரு, திம்மராஜபுரம், கக்கன்நகர், வெங்கடேஷ்வரா நகர், சாந்திநகர், ரஹ்மத்நகர்,வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, கேடிசி நகர் ஆகிய பகுதிகளில் பலர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை இதுவரை செலுத்தாமல் உள்ளனர்.
இப்பகுதிகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே பொதுமக்கள் நிலுவையின்றி வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.