தினமலர் 28.09.2010
கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணியை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு
கடையநல்லூர்:கடையநல்லூர் நகராட்சியில் 22 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளை உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று (28ம் தேதி) காலை ஆய்வு செய்கின்றனர்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைத்திடும் பொருட்டு தமிழக அரசிடம் முழு மானியத்துடன் கூடிய குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் தமிழக அரசின் சார்பில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 22 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசன் கலந்து கொண்டனர்.
இந்த குடிநீர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் மேலக்கடையநல்லூர், தெருப்பகுதி, பேட்டை, கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் கட்டப்படுகிறது.இதனை விரைவில் மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தும் வகையிலும் இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலும் கடையநல்லூரில் இன்று (28ம் தேதி) உயர்மட்ட அதிகாரிகள் குழு திட்டம் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். குழாய்கள் புதுப்பிக்கப்படுவது குறித்தும், வாட்டர் டேங்குகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாகவும், குடிநீர் அனைவருக்கும் சீராக கிடைத்திடுவதற்கு மேற்கொள்ள வேண்டியது குறித்தும் இந்த ஆய்வில் ஆராயப்பட உள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தனியார் துறை இன்ஜினியர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து 22 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டு விழா காணப்பட்டுள்ள கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.