தினகரன் 29.09.2010
மேலவாசல் குடியிருப்பில் பன்றி வளர்க்க மாநகராட்சி தடை
மதுரை, செப். 29: மதுரை மேலவாசலில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு பகுதியில் பன்றி, மாடு வளர்க்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் மதுரை மேலவாசலில் 480 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை மேயர் தேன்மொழி, ஆணையாளர் செபாஸ்டின் ஆய்வு நடத்தி கூறியதாவது: மாநகராட்சி துப்புரவு பணியாளருக்காக இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பை அக்டோபர் 3ல் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறக்கிறார்.
ஏற்கனவே இங்கு குடியிருந்தவர்களுக்கு மட்டும் புதிய வீடுகள் ஒதுக்கப்படும். இங்கு பன்றி, ஆடு, மாடுகள் வளர்க்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
பிறகு தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமை பொறியாளர் சக்திவேல், மண்டல தலைவர் மாணிக்கம், பி.ஆர்.ஓ. பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.