தினமணி 29.09.2010
குடிநீர் திருட்டு: ஆட்சியர் எச்சரிக்கை
மதுரை,செப்.28: மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
மதுரை மாநகருக்கு, வைகை அணையிலிருந்து குடிநீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் மின்சாரம் பொருத்தி சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் திருடப்படுவதாக தெரிய வருகிறது.
இதனால் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
எனவே மின்சார மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுபவர்கள் கண்டறியப்பட்டால், குடியிருப்பு உரிமையாளரின் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.