தினகரன் 30.09.2010
எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டு நிதி பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
பெங்களூர், செப். 30: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை சரியாக பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லேஷ் கோரிக்கை வைத்தார்.
மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லேஷ் கலந்து கொண்டு பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினரின் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் கோடிகணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் நிதியை பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதை மாநகராட்சி அதிகாரிகள் மதிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு உண்மையான பயனாளிகளுக்கு செலவிடாமல் தவிர்த்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநியாயம் செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.