தினகரன் 30.09.2010
பாதாள சாக்கடை நீரை வைகையில் வெளியேற்றியவர்களுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
மதுரை, செப். 30: பாதாள சாக்கடை நீரை வைகை ஆற்றுக்குள் வெளியேற்றியவர்களுக்கு ரூ50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த இணைப்பு பெறாமல், பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையை புதிதாக கட்டிய மழை நீர் வடிகாலிலும், வைகை ஆற்றிலும் வெளியேற்றுகின்றனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நடத்திய சோதனையில் கிருதுமால் நதி, சிந்தாமணி கால்வாய், வைகை ஆற்றின் கரை ஓரங்களில் 25 வீடு மற்றும் 2 தொழில் நிறுவனங்கள் சிக்கியது. இவர்களுக்கு ரூ50ஆயிரம் வரை அபராதம் விதித்து மாநகராட்சி வசூலித்துள்ளதாக ஆணையாளர் செபாஸ்டின் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, புதூர், கற்பகநகர், பந்தல்குடி, செனாய்நகர், சொக்கிகுளம், செல்லூர், எஸ்.எஸ்.காலனி, மேலப்பொன்னகரம், காமராஜர்சாலை, பழங்காநத்தம், டி.பி.கே.சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகாலில் பாதாள சாக்கடையை தவறான முறையில் வெளியேற்றுவதாக புகார் வந்துள் ளது. இவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.