தினமலர் 04.10.2010
பஸ் ஸ்டாண்டிலுள்ள 3 கடைகளை மூட உத்தரவு
சிவகாசி: சிவகாசி இந்திராநகர் குடியிருப்போர் நல சங்கத்தலைவராக இருப்பவர் மாரிமுத்து.இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் தரைக் கடை நடத்த ஏலம் எடுத்தவர்கள் விதிகளுக்கு புறம்பாக கட்டடங்களை கட்டி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், கடைகளை அகற்ற வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, நாகமுத்து ஒரு நபர் கமிஷன் நியமித்து விசாரிக்க உத்தரவிட்டனர். ஒரு நபர் கமிஷன் கடந்த வாரம் கடைகளை ஆய்வு செய்து ஐகோர்ட் கிளைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.இதன் அடிப்படையில் சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் தரை கடை நடத்த அனுமதி பெற்ற சர்மிளா,பாண்டியராஜ்,பர்வீன் சுல்தான் ஆகியோரின் கடைகளை 4 வாரங்களுக்கு மூடுவதற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடைகள் மூடப்பட்டன.