தினமணி 06.10.2010
பழுதடைந்த சாலை, கால்வாயில் கழிவுநீர் கலப்பு: உடனடியாக சரி செய்ய மேயர் உத்தரவு
மதுரை,அக்.5: பழுதடைந்த மதுரை பூந்தமல்லி நகர் சாலையையும், முல்லைநகர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதையும், நேரில் பார்வையிட்ட மேயர் கோ. தேன்மொழி, அவற்றை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 1 முதல் 21 வார்டுகள் வரையிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மேயர் தேன்மொழி, துணைமேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் பங்கேற்று மனுக்களை ஆய்வு செய்தனர். இதில், பெறப்பட்ட 35 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.
முன்னதாக, 19-வது வார்டு பூந்தமல்லி நகர் பகுதியில் பழுதடைந்த சாலையைப் பார்வையிட்டு அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், 2-வது வார்டு முல்லைநகர் கால்வாயில் ஆனையூர் பகுதியிலிருந்து வருகிற கழிவுநீர் கலப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட மேயர் சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.
7-வது வார்டில் மாநகராட்சி சுகாதார வளாகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமை மேயர் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, மாநகர் மன்ற உறுப்பினர்கள் நல்லகாமன், நீலமேகம், சந்திரன், தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார்,நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (வடக்கு ) ராஜகாந்தி,மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.