தினமணி 06.10.2010
அனுமதி பெறாத கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை: நகர ஊரமைப்பு இயக்குநர்
கோவை, அக். 5: முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் தெரிவித்தார்.
கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் நகர ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் பங்கேற்று விண்ணப்பதாரர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கான புதிய விதிமுறைகள் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 9 மாநகராட்சிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் முழுமையாக நடைமுறையில் உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய விதிகளின்படி குடியிருப்புகள், நிறுவனங்கள் அமைக்கும் போது கட்டடங்களுக்கு இடையே 9 மீட்டர் இடைவெளி அவசியம். கட்டடத்தின் அளவிற்கு ஏற்ப வாகனம் நிறுத்தும் வசதி கட்டாயம். வாகனங்கள் நிறுத்தும் வசதியை விதிமுறையில் உள்ளவாறு செய்யாத நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு அனுமதி கிடைக்காது. முறையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களில் அனுமதி வழங்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் போல கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைக்க துறை ரீதியிலான பரிந்துரையை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அவ்வாறு விதி மீறிய கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்மீறிய கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்