தினகரன் 13.10.2010
மருத்துவ விடுப்பு எடுத்த நகராட்சி அதிகாரியை டிஸ்மிஸ் செய்தது சரி
மதுரை, அக். 13: நீண்டநாள் மருத்துவ விடுப்பு எடுத்த நகராட்சி அதிகாரியை பணி நீக்கம் செய்தது சரி தான் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் நகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் கணேசன். இவர் 2004 ஜனவரி 28 முதல் தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்துள்ளார். இதனால் இவரை 2007 செப்டம்பர் 19ல் டிஸ்மிஸ் செய்து நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர்த்து அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கணேசன் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு; மனுதாரர் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவ குழு அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்பிறகும் பணியில் சேராமல் விடுப்பை நீட்டித்துள்ளார். இது தொடர்பான அதிகாரியின் விசாரணைக்கு அவர் செல்லவில்லை, உரிய விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்ததில் தலையிட முகாந்திரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.