தினமணி 15.10.2010
மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
மானாமதுரை, அக். 14: மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சம்பத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். முன்னதாக அலுவலகத்துக்கு வந்த ஆட்சியரை பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது ஆகியோர் வரவேற்றனர். இதன்பின் ஆட்சியர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அலுவலகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த சுகாதார பணி வாகனங்களை ஆய்வு செய்தார்.
நகரில் வைகையாற்றுக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு ஆட்சியரிடம் பேரூராட்சித் தலைவரும், துணைத் தலைவரும் வலியுறுத்தினர். இதன்பின் வைகையாற்றுக்குச் சென்ற ஆட்சியர் அங்கு ஆற்றுக்குள் கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு கழிவுநீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துதர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தில் மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு பேரூராட்சி அலுவலர்களிடம் விவரம் கேட்டார். அப்போது தலைவர் ராஜாமணி, துணைத் தலைவர் ஜோசப்ராஜன், கவுன்சிலர் சோமன், பஸ் நிலைய சீரமைப்புப் பணி ஒப்பந்ததாரர் பொறியாளர் காவேரி ஆகியோர் உடனிருந்தனர்.