தினமணி 15.10.2010
சாலையில் சுற்றித்திரிந்த 32 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு அபராதம்
குடியாத்தம், அக். 14: குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 32 பசு மாடுகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பிடித்தனர்.
பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில் நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சி.ஆறுமுகம் தலைமையிலான ஊழியர்கள் சாலைகளில் சுற்றித் திரிந்த 32 பசுமாடுகளை பிடித்து வந்து அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர்.
மாடுகளின் உரிமையாளர்கள் தலா ரூ 500 அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை பிடித்துச் செல்லலாம். இல்லாவிட்டால் மாடுகள் பராமரிப்புக்காக நாள் ஒன்றுக்கு ரூ 100 கூடுதலாக வசூலிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் பிடித்துச் செல்லாவிட்டால் 10 நாள்கள் கழித்து பொது ஏலம் விடப்படும் என ஆணையர் ஆர். சுப்பிரமணியன் தெரிவித்தார்.