தினமணி 19.10.2010
சென்னையில் இலவச கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலித்தவர் கைது
சென்னை, அக்.19: சென்னை மாநகராட்சி இலவச பொதுக் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்தவரைக் கைது செய்ய மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆணையர் கார்த்திகேயன் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்தார். சிந்தாதிரிப்பேட்டை 82-வது வார்டில் பூதப்பெருமாள் கோயில் தெருவில் மாநகராட்சி இலவச பொதுக்கழிப்பிடத்தில் அன்வர் என்பவர் பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்து காவல்துறை ஆய்வாளரிடம் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மாநகராட்சி பொறியாளர் ஞானச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் அன்வர் கைது செய்யப்பட்டார் என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.