தினகரன் 21.10.2010
ரூ20 கோடியில் பணிகள்: கலெக்டர் ஆய்வு
காஞ்சிபுரம், அக். 21: மாவட்டத்தில் ரூ20 கோடி செலவில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி நேற்று ஆய்வு செய்தார்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்த ரூ20 கோடி நிதியை முதல்வர் கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலம், பல்வேறு பகுதிகளில் சாலை, பூங்கா, கால்வாய், விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. இந்தப் பணிகளை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
காந்தி சாலை மேம்பாடு, நகராட்சி பூங்கா, வரதராஜ பெருமாள் சந்நிதி தெரு சிமென்ட் தளம், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ1 கோடியே 32 லட்சத்தில் கட்டப்படும் நீச்சல் குளம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர், காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேட்டில் ரூ25 லட்சத்தில் அமைக்கப்படும் பல்லவன் பூங்காவை ஆய்வு செய்தார். பூங்காவில் கூடுதலாக விளையாட்டு பொருட்களையும், மக்கள் அமர்வதற்கு இருக்கைகளும் அமைக்க அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். ரூ60 லட்சம் செலவில் திருப்பருத்திக்குன்றம் கால்வாயை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணி, ரூ2 கோடியே 5 லட்சம் செலவில் கச்சபேஸ்வரர் நகரில் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா, ரூ43 லட்சத்து 9,000 செலவில் காமாட்சி அம்மன் சன்னதி தெரு, ஏகாம்பர நாதர் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் சாலைப் பணி, ரூ1 கோடியே 93 லட்சம் செலவில் ஒக்கப்பிறந்தான் குளத்தை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.
உதவி இயக்குனர் சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியம், பொதுப்பணித் துறை அதிகாரி குமரேசன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி லோகநாதன், செவிலிமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் விஸ்வநாதன், செவிலிமேடு பேரூராட்சி தலைவர் ஏழுமலை உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கட்டப்படும் நீச்சல் குளத்தை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி நேற்று பார்வையிட்டார்.