Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவு

Print PDF

தினமணி 22.10.2010

கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவு

கடலூர், அக். 21: கடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை, பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

÷கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டும் பணி தொடங்கப்பட்டு 3 நாள்களாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே இப்பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.

÷பணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். இப்பணி எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடப்பதை அறிந்த ஆட்சியர், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் இதுகுறித்துப் பேசினார். பணி நடைபெறுவதாக எந்த அறிவிப்பும் அங்கு வைக்கப்படாமலும், தோண்டும் பணியில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதையும் ஆட்சியர் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்த பிறகே பணி நடைபெற வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

÷கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணியின்போது, நகராட்சி குடிநீர் குழாய்கள் செவ்வாய்க்கிழமை உடைந்ததால் சாலைகளில் குடிநீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு தேங்கிய நீரை தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.