Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பட்டாசு கடைகளுக்கு உரிமம்வழங்குவதில் மாநகராட்சி குழப்பம்

Print PDF

தினமலர்                     02.11.2010

பட்டாசு கடைகளுக்கு உரிமம்வழங்குவதில் மாநகராட்சி குழப்பம்

சென்னை : நகரில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் சென்னை மாநகராட்சி குழப்ப நிலையில் உள்ளது. உரிமம் இல்லாமலே நகரில் பல இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.


தீபாவளி பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து, நகரில் பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடை வைக்க வேண்டும் எனில், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று பெற்ற பின், மாநகராட்சியின் உரிமம் பெற வேண்டும்.சிறிய அளவில், அதாவது, 50 கிலோ எடையுள்ள பட்டாசுகளை வைத்து விற்பனை செய்யும் அளவிற்கு கடையாக இருந்தால் அதற்கு 1,000 ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். 100 கிலோவிற்கு மேல் பட்டாசுகளை விற்கும் கடையாக இருந்தால் 2,000 ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றுடன் சேர்த்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு செய்தால், மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து உரிமம் வழங்குவர்.ஆனால், இந்தாண்டு இதுவரை பட்டாசு கடை வைக்க மாநகராட்சியில் ஒருவர் கூட உரிமம் கேட்டு, மனு செய்யவில்லை. போலீஸ் தடையின்மை சான்றுகளே நேற்றுதான் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், நகரில் பல இடங்களில் தற்போது, பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸ் தடையின்மை சான்றும் இல்லை. மாநகராட்சியின் உரிமமும் இல்லை.இது குறித்து, மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலரிடம் விசாரித்த போது, மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஒரு உதவி வருவாய் அலுவலர், ""நாங்கள் உரிமம் கொடுக்க வேண்டியதில்லை. போலீஸ் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்றால் போதும்,'' என்கிறார்.மற்றொரு உதவி வருவாய் அலுவலர்,"போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்று வந்து கொடுத்த பின் நாங்கள் உரிமம் கொடுப்போம்' என்கிறார். உரிமம் கொடுப்பதா, இல்லையா என்பதே மாநகராட்சி வருவாய் அலுவலர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த அனுமதியும் இல்லாமல், நகரில் நான்கு, ஐந்து நாட்களாக, செயல்படும், பட்டாசு கடைக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை.மாநகராட்சி கமிஷனர், கார்த்திகேயன் கூறும் போது, "பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் போலீசிடம் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட கடைக்காரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். இதற்கு மண்டல அளவில் உதவி வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.