தினமணி 08.11.2010
காரைக்குடி நகராட்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காரைக்குடி, நவ. 7: காரைக்குடி நகராட்சிப் பணிகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டு பணிகளைப் பார்வையிட்டார்.
காரைக்குடி நகராட்சியின் அலுவலக விரிவாக்கப் பணிகள், நகராட்சி அருகிலேயே நவீனப் பூங்கா அமைக்கப்பட்டுவருவது, நூறடிச்சாலையில் போக்குவரத்து
குறைபாடுகள் குறித்தும் ஆட்சியர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
ஆட்சியருடன் நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகராட்சிப் பொறியாளர் எஸ். மணி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
ஆட்சியர் வருகை குறித்து நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர் ஆட்சியர் வருகை குறித்து தெரிவித்திருந்தால் நகரில் பல்வேறு பகுதிகளை குறிப்பாக மயானம் போன்ற சுகாதாரமின்றி இருக்கும் பகுதிகளை அவரிடம் காட்டியிருக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பின்னர் நவீனப் பூங்காவை ஆட்சியர் பார்க்க வரும்போதாவது எனக்குத் தகவல் சொல்லுங்கள் நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து ஆட்சியர் பல்வேறு ஆய்வுகளை முடித்துக்கொண்டு நவீனப் பூங்காவுக்கு வந்தபோது நகராட்சி அதிகாரிகள் நகர்மன்றத் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர் புதிததாக அமைக்கபட்டு வரும் பூங்காவை ஆட்சியர் பார்வையிட்டபோது நகர்மன்றத்தலைவர் முத்துத்துரையும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து நகராட்சிக் கட்டடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.