தினகரன் 10.09.2010
மேயர் எச்சரிக்கை மெரினாவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தினால் ரூ100 அபராதம்
சென்னை, நவ.10: மெரினா கடற்கரை நவீன இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
மெரினா கடற்கரை ரூ26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கவும், தூய்மைப்படுத்தவும் தினமும் 149 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவர் இதை கண்காணித்து வருகிறார்.
இங்கு 3 நவீன கழிப்பறைகள், நீச்சல் குள அலுவலக கட்டிடம், உடை மாற்றும் அறை, சிமென்ட் கற்கள் பதிப்பு ஆகிய பணிகள் ரூ1.65 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். 1500 இடங்களில் எலி வலைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்தினால் ரூ100 அபராதம் வசூலிக்கப்படும்.