தினமலர் 10.11.2010
திருச்செங்கோடு நகராட்சியில் திட்டப்பணிகள் முடிக்க உத்தரவு
நாமக்கல்: திருச்செங்கோடு நகராட்சியில் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், இம்மாதம் 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டார்.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் மின்தகன மேடை, காத்திருப்போர் அறை, கழிப்பிடம் கட்டுதல், சைக்கிள் நிறுத்தும் இடம், ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய கட்டுமானப் பணிகள் நடக்கிறது.
அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் மதுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசு நிதியாக 49 லட்சம் ரூபாய், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 34 லட்சம் ரூபாய், எம்.பி., நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய், இதர நிதியாக 9 லட்சம் ரூபாய் என மொத்தம் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம், நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பணி குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கிய கலெக்டர் மதுமதி, அனைத்து பணிகளையும் இம்மாதம் 30ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் சமுதாய நலக்கூடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் நெசவாளர் காலனியில் கட்டப்படும் சாக்கடை கால்வாய் உள்ளிட்டவற்றை கலெக்டர் மதுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி சேர்மன் நடேசன், கமிஷனர் இளங்கோவன், தலைமை இன்ஜினியர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.