தினமணி 18.11.2010
நகராட்சிகள் நிர்வாக ஆணையர் ஆய்வு
திருவண்ணாமலை, நவ.17: திருவணணாமலை கார்த்திகை தீப விழாப் பணிகள் தொடர்பாக திருவண்ணாமலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் பி.செந்தில்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 9 தாற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பயணிகள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. முதலில் அப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் திருவண்ணாமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று கடலைக்கடை மூலை, செங்கம் சாலை (அரசு தலைமை மருத்துவமனை) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார். நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யவும், சாலை ஓரங்களில் தேங்கியுள்ள மணலை வாரவும் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சிகள் கூடுதல் இயக்குநர் ஜி.பிச்சை, மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணியன், ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.