Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பஹர்கஞ்சில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற விடுதிகளுக்கு நோட்டீஸ் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினகரன்           24.11.2010

பஹர்கஞ்சில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற விடுதிகளுக்கு நோட்டீஸ் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

புதுடெல்லி, நவ. 24: டெல்லியில் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹர்கஞ்சில் அனுமதி பெறாமல் ஏராளமான விருந்தினர்கள் விடுதிகள் முளைத்துள்ளன. இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பஹர்கஞ்சில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. டெல்லிக்கு வருபவர்கள் பஹர்கஞ்ச் பகுதிக்குதான் அதிகளவில் செல்வார்கள். இதனால் அனுமதி பெறாமல் இங்கு ஏகப்பட்ட விருந்தினர்கள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மட்டும் சுமார் 400 விருந்தினர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 150 விடுதிகள் மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் இயங்கி வருபவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளிடம் இஷ்டத்துக்கு இவர்கள் வாடகை வசூலிப்பது, அடாவடி செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதை கருத்தில் கொண்டு இந்த விருந்தினர் விடுதிகளுக்கு கடிவாளம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதில், உடனடியாக விருந்தினர்களை இல்லங்களை மாநகராட்சியில் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், அவை பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சதர் பஹர்கஞ்ச் மண்டல துணை கமிஷனர் ரேணு ஜெகதேவ் கூறுகையில், "விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சதர் பஹர்கஞ்ச் மண்டல கட்டிடத்துறை இன்ஜினியர் சார்பில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு பதில் மனு அனுப்ப வேண்டும். அவ ர்களின் பதில் மனுவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின் நடவடிக்கையில் இறங்குவோம்" என்றார்.

ஆனால், அனுமதி பெறாமல் இயங்கி வரும் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ள ஓட்டல் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "நாங்கள் டெல்லி மாஸ்டர் பிளான் & 2021ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பகுதியில் உள்ளோம். இதனால் டெல்லி மாநகராட்சியிடம் நாங்கள் பதிவு செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கும் வகையில் இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.