தினகரன் 24.11.2010
பிளாஸ்டிக் பை விநியோகித்த கடைக்காரர்களுக்கு அபராதம் தேனி நகராட்சி அதிரடி
தேனி, நவ.24: தேனி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்த கடை வியாபாரிகள் 90 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டீ கப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் சில கடைக்காரர்கள் மறைமுகமாக பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடந்த இரு நாளாக தேனி அல்லிநகரம் நகராட்சி உணவு ஆய்வாளர்கள் அறிவுச் செல்வம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுருளிநாதன் உள்ளிட்டோர் தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள டீக்கடை, பேக்கரி, ஹோட்டல்கள், காய்கறிக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சிறு கடைகளுக்கு ரூ.100ம், நடுத்தர கடைகளுக்கு ரூ.200ம், மொத்த வியாபாரக் கடைகளுக்கு ரூ.500மாக மொத்தம் 90 பேருக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சோதனை தொடரும். இதில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்‘ என்றனர்.