Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு தொழிலாளருக்கு பி.எப் பணம் வழங்காத பெரம்பலூர் நகராட்சி கமிஷனருக்கு பிடிவாரன்ட்

Print PDF

தினகரன்                29.11.2010

துப்புரவு தொழிலாளருக்கு பி.எப் பணம் வழங்காத பெரம்பலூர் நகராட்சி கமிஷனருக்கு பிடிவாரன்ட்

பெரம்பலூர், நவ.29: ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு பி.எப் பணம் வழங்காத பெரம்பலூர் நகராட்சி ஆணையரை டிசம்பர் 7ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி 12வது வார்டு ராஜாஜி தெருவை சேர்ந்தவர்கள் ராமலிங்கம், கோவிந்தன், மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பன், 14வது வார்டை சேர்ந்தவர்கள் செல்லமுத்து, ராஜு. இவர்கள் 5 பேரும் பெரம்பலூர் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்கள்.

ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பி.எப் பணம் தரப்படவில்லை. பலமுறை கேட்டும் கிடைக்காததால் 5 பேரும் 2008ல் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின்பு ஓய்வு பெற்ற நீலம்மாள், பெரியண்ணன், சுந்தரி, வீரம்மாள் ஆகியோரும் இவ்வழக்கில் தங்களை சேர்த்துக் கொண்டனர்.

வழக்கை விசாரித்த கோர்ட், ஓய்வுபெற்ற 9 பேருக்கும் பிஎப் பணம், இழப்பீட்டு தொகை, வழக்கு செலவு தொகை ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டது. ஆனால் பிஎப் தொகை மட்டும் வழங்க முடியும், மற்ற தொகை மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கு பின்புதான் தர முடியும் எனக்கூறிய நகராட்சி நிர்வாகம், 9 பேருக்கும் தலா ரூ.5,000த்தை மட்டும் வழங்கியது.

இதனால் 9 பேரும் நுகர்வோர் மன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி நந்தன், பெரம்பலூர் நகராட்சி ஆணையரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டார்.

பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், கைது உத்தரவை போலீசாரிடம் கொடுக்க வேண்டும் எனவும் நகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்பிறகும் பாதிக்கப்பட்டோருக்கு உரிய தொகை வழங்கப்படாததால், நகராட்சி ஆணையரை டிசம்பர் 7ம் தேதிக்குள் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து நீதிபதி நந்தன் உத்தரவிட்டுள்ளார்.