தினமலர் 30.11.2010
மழைநீர் புகுந்த பகுதிகள்மேயர், கமிஷனர் பார்வை
திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் புகுந்த குடியிருப்புகளை மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டனர்.திருச்சி மாநகரில் பெய்த தொடர் மழையால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கோரையாறு, அரியாறு,உய்யக்கொண்டான் வாய்க்காலில் வரும் மழைநீர் புத்தூர் கலிங்கு ஆறுகண் வழியாக உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்கால் மூலமாக காவிரி ஆற்றுக்குச் செல்கிறது.உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் மழைநீர் தடையின்றி செல்ல வயலூர் ரோடு பாலம் மற்றும் சோழகன்பாறை பகுதியில் உள்ள நடைபாலத்தில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரையை மாநகராட்சி பணியாளர் கொண்டு அகற்றப்படுகிறது.
இப்பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின், 60வது வார்டு தியாகராஜநகர் இளங்கோ தெரு அருகே வாய்க்காலின் கரை பலவீனமாக உள்ள இடத்தில் மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். கூடுதலாக 200 மணல் மூட்டைகள் கொண்டு கரையை தற்காலிகமாக பலப்படுத்துமாறு ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட பொறியாளரிடம் தெரிவித்தனர்.ஏ.யு.டி.,காலனி, குடமுருட்டி ஆறு, வயலூர் ரோடு, அம்மையப்ப நகர், புத்தூர் கலிங்கி ஆறுகண் ஆகிய இடங்களில் மழைநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள், சாலையோரங்கள், தெருக்கள் ஆகிய இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை அகற்றும்படி தெரிவித்தனர்.