மாலை மலர் 27.08.2009
எழும்பூரில் விநாயகர் கோவில் முகவரியில் போலி ரேஷன் கார்டு: மாநகராட்சி அதிகாரி விசாரணை
சென்னை, ஆக. 27-
சென்னையில் போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடிக்க வீடு வீடாக அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் எழும்பூர் விநாயகர் கோவில் முகவரியை பயன்படுத்தி முஸ்லிம் வாலிபர் ஒருவர் போலியாக ரேஷன் கார்டு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிக்கு புகார்கள் குவிந்துள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
எழும்பூரை சேர்ந்த சபீக்பேக் என்பவர் எண்.1, சுந்தரம் தெரு, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு மாற்றம் செய்து ரேசன் கார்டு பெற்றுள்ளார்.
அவர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் வீடு ஏதும் கிடையாது. அந்த முகவரியில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக விநாயகர் கோவில் மட்டுமே உள்ளது. எந்த அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் விநாயகர் கோவில் முகவரிக்கு முஸ்லிம் வாலிபருக்கு ரேசன் கார்டு வழங்கினர் என்பது தெரியவில்லை. இதையறிந்த அப்பகுதி மக்கள் கொந்தளித்தனர்.
இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் மனோகரனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதி மக்கள் கூறும்போது, சாதாரண மக்கள் உண்மையான முகவரி கொடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் இழுத்தடித்து 1 வருடம் கழித்துதான் ரேசன் கார்டு வழங்குகிறார்கள். ஆனால் முஸ்லிம் வாலிபருக்கு விநாயகர் கோவில் முகவரியில் போலி ரேசன் கார்டு வழங்கி இருப்பதற்கு பின்னணியில் ஏதோ சதி நடந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மாநகராட்சி உதவி ஆணையர் மனோகரன் கூறும்போது:-
கடந்த 1 1/2 மாதங்களாக இது பற்றிய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. ஊழியர்களை அனுப்பி ஆய்வு செய்தேன். இது போல்தான் நடந்துள்ளது. பிரச்சினைக்குரியது என்பதால் நானே நேரடியாக சென்று விசாரிக்கலாம் என்று இருக்கிறேன். நேரம் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.