Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விகாஸ் மார்க்கில் விரிசல் விழுந்த கட்டிடத்துக்கு‘சீல்’

Print PDF

தினகரன்            01.12.2010

விகாஸ் மார்க்கில் விரிசல் விழுந்த கட்டிடத்துக்குசீல்

புதுடெல்லி, டிச. 1: விகாஸ் மார்க்கில் விரிசல் விழுந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கிழக்கு டெல்லியின் லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க்கில் கடந்த 15ம்தேதியன்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானார்கள். அதில், 2 மாடி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதனால் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்துக்கு அருகில் உள்ள விகாஸ் மார்க் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளதாக மாநகராட்சிக்கு நேற்று முன்தினம் தொடர்ந்து புகார்கள் வந்தன. மாநகரா ட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, கட்டிடத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி சீல் வைத்தனர். பிறகு, விரிசலை ஆய்வு செய்தபோது, அது பல மாதங்களுக்கு முன்பே விழுந்த விரிசல் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டிடம் முழுவதையும் மாநகராட்சியின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கட்டிடத்துக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரிந்தது. ஆனாலும், மாநகராட்சி தொழில்நுட்ப பிரிவின் கட்டுப்பாட்டில் கட்டிடம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விரிசலின் அகலம் நாளுக்குநாள் அதிகரிக்கிறதா? என்பதை கண்காணிப்பதற்காக, விரிசல் விழுந்த இடத்தில் கண்ணாடிகளும், பேப்பர் அட்டைகளும் பொருத்தப்பட்டுள்ளன. விரிசல் அதிகரித்தால் கண்ணாடிகள் உடைந்து விடும். பேப்பர் கிழிந்து விடும். அதனால் இன்னும் சில தினங்களில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மை தெரிந்துவிடும். அதன்பிறகு, தொழில்நுட்ப பிரிவினர் தரும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.