தினமலர் 03.12.2010
புளியங்குடியில் வரி செலுத்தாத 2 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
புளியங்குடி : புளியங்குடி பகுதியில் குடிநீர் இணைப்பு வரி செலுத்தாத இரண்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தமிழகத்தில் குடிநீர் வரி, சொத்துவரி வசூல் மந்தமான நிலையில் இருப்பதால் வரி வசூலை தீவிரப்படுத்துமாறு நகராட்சிகளின் மண்டல இயக்குநருக்கு தமிழக அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து புளியங்குடி நகராட்சி பகுதியில் அக்டோபர் 2010 வரை உள்ள அரை ஆண்டுக்கான குடிநீர்வரி மற்றும் சொத்துவரி செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மேற்கொள்ளப்படுமெனவும் நகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புளியங்குடி நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 8 ஆயிரத்து 200 இணைப்புகளில் வரிவசூல் மந்தமாக இருந்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தாத இரண்டு இணைப்புகளை துண்டித்தனர். அப்போது பொறியாளர் முகம்மது ஷெரீப், வருவாய் ஆய்வாளர் கரீம், ஓவர்சியர் மைதின் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.