தினமணி 08.12.2010
கழிவுநீர் அகற்றும் பணி: தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுரை
கோவை, டிச. 7: கழிவுநீர் அகற்றும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.
செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றும் ஊர்தி ஓட்டுநர்கள், பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை ஆணையர் எஸ்.பிரபாகரன், நகர்நல அலுவலர் எஸ்.ஹரிகிருஷ்ணன், உதவி நகர்நல அலுவலர் பி.அருணா, சுகாதார ஆய்வாளர்கள், கழிவுநீர் அகற்றும் தனியார் லாரி நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர்.
செப்டிக் டேங்குகளைச் சுத்தம் செய்யும் பணியை துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு செய்யக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இப்பணியை மேற்கொள்ளும்போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கழிவுநீர் அடைப்புகள், செப்டிக் டேங்க் கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளிலும் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத சூழலில் மட்டுமே துப்புரவுப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை பொதுசுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.