தினமலர் 13.12.2010
வரி செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் லோகநாதன் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் நகராட்சி வருமானத்தை வைத்து ஈடு செய்யப்படும். 2010-11ம் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும் நகராட்சிக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், கடை வாடகைகள் சம்மந்தப்பட்டவை அந்தந்த மாதத்தின் 10ம் தேதிக்குள் நகராட்சிக்கு தவறாமல் செலுத்தப்படவேண்டும்.
ஆனால், பலர் வரி செலுத்தமாமல் உள்ளனர். எனவே நகராட்சிக்கு 2010-11ம் ஆண்டுக்கு செலுத்தப்பட்ட வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, காலிமனை வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் மற்றும் உரிம கட்டணங்கள் ஆகியவற்றை நகராட்சியின் கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்களில் அனைத்து நாட்களிலும் செலுத்தலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குத்தகை தொகைகள் செலுத்துவதற்காக காலக்கெடு கடந்த மாதம் 30ம் தேதிக்குள் முடிவுற்றதால் ஆண்டு குத்தகை தொகைகளை வரும் 15ம் தேதிக்குள் தவறாமல் செலுத்தி குத்தகை உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.நிலுவை தொகைகள் செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குத்தகை செலுத்தாத இனங்களில் குத்தகை உரிமம் ரத்து செய்து துறை மூலமாக வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.