தினகரன் 14.12.2010
சிஎம்டிஏ அதிகாரிகள் அதிரடி அனுமதியின்றி கட்டப்பட்ட 7 கடை, 3 வீடுகளுக்கு சீல்
பூந்தமல்லி, டிச.14: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அவசர சட்டத்தின்படி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டிய கட்டிடம், வணிக வளாகங்கள் வரைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதல் கட்டமாக, பூந்தமல்லி லட்சுமி நகரில் பாரிவாக்கத்தை சேர்ந்த திலகவதிக்கு சொந்தமான 3 கடைகள், 3 வீடுகள், எம்.ஜி. நகரில் ராஜேஸ்வரியின் 4 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டன. பூந்தமல்லி நகராட்சி நிர்வாக அதிகாரி சுமா உத்தரவின்படி, நகரமைப்பு ஆய்வாளர் தினகர் சீல் வைத்தார்.
‘அனுமதி பெறாத மற்ற கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கும் பணி தொடரும்‘ என தினகர் கூறினார்.