Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல ஆண்டு குடிநீர் கட்டணம் நிலுவை மேட்டூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர்              14.12.2010

பல ஆண்டு குடிநீர் கட்டணம் நிலுவை மேட்டூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

மேட்டூர்: பல ஆண்டுகள் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். மேட்டூர் நகராட்சியில் 30 வார்டு உள்ளது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு என நகராட்சி மூலம் ஆறாயிரத்து 800 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு ஆயிரம் லிட்டருக்கு ரூ.6 வீதம் குடிநீர் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டிற்கு நான்கு முறை குடிநீர் வரி வசூல் செய்யப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் குடிநீர் வரியை குறித்த நேரத்தில் செலுத்துவதில்லை. பல லட்சம் ரூபாய் குடிநீர் வரி வசூல் செய்யாமல் நிலுவையில் உள்ளது.

ஏராளமான பொதுமக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வரி செலுத்தகோரி சம்பந்தபட்ட பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. எனினும், வரி செலுத்த மக்கள் முன்வரவில்லை. வரி செலுத்தாத குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். கமிஷனர் கணேசன் உத்தரவுபடி நேற்று நகராட்சி ஊழியர்கள் மேட்டூர் 25வது வார்டு, 18வது வார்டு ஆகிய இடங்களில் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.