தினகரன் 15.12.2010
விழுப்புரம் நகராட்சியில் வரி செலுத்த தவறினால் நீதிமன்ற நடவடிக்கை : ஆணையர் எச்சரிக்கை
விழுப்புரம், டிச. 15: விழுப்புரம் நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
விழுப்புரம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, குத்தகை இனம் மற்றும் பொது சுகாதார பிரிவு உரிமக் கட்டணங்கள் நிலுவை அதிகமாக உள்ளது. இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் அனுபவதாரர்களுக்கு கேட்பு அறிக்கை மற்றும் காலக்கெடு அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் அடிப்படை திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டம், சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டம், குடிநீர் அபிவிருத்தித் திட்டம், வெள்ள நிவாரண பணிகள் ஆகியவை தீவிரமாக நடந்து வருகிறது. நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட சொத்தின் உரிமையாளர்கள், அனுபவதாரர்கள் மற்றும் குத்தகை இன உரிமைதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை மற்றும் கடை வாடகை, பொது சுகாதார உரிமக் கட்டணங்கள் ஆகியவற்றை வரும் 25ம் தேதிக் குள் நகராட்சி அலுவலக கணினி மையத்தில் செலுத்த வேண்டும். கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.