தினகரன் 16.12.2010
ஆலந்தூரில் ரூ. 34 கோடியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி உலக வங்கி குழு ஆய்வு
ஆலந்தூர், டிச. 16:
ஆலந்தூர் நகராட்சியில் மக்கள் பங்களிப்போடு ரூ34 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் வளர்ச்சிப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
மேலும் இ&கவர்ன் மூலம் தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது. இவற்றை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக 6 பேர் அடங்கிய உலக வங்கி நிதிக்குழுவினர் நேற்று ஆலந்தூர் வந்தனர்.
அவர்களை நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு, ஆணையர் மனோகர், பொறியாளர் மகேசன், நகரமைப்பு அதிகாரிகள் செம்பன், தினகரன், கணேச மூர்த்தி ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மன்ற கூடத்தில் கலந்துரையாடல் நடந்தது.
உலக வங்கி இயக்குனர் ரொபார்ட்டோ ஷாகா எழுப்பிய சந்தேகங்களுக்கு திரை மூலம் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு உள் கட்டமைப்பு நிதி நிர்வாக இயக்குனர் பணிந்தர்ரெட்டி, நகராட்சிகளின் இணை இயக்குனர் ரீட்டா தாகூர், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு கூறுகையில், “பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் வளர்ச்சி பணிகள் உலகவங்கி குழுவினருக்கு நிறைவு அளித்துள்ளது. இதை பார்வையிட ஜனவரி 13ம் தேதி உலக வங்கி தலைவரும் வருகை தர உள்ளார்” என்றார்.