தினகரன் 10.01.2011
க.புதுப்பட்டி பேரூராட்சி எச்சரிக்கை : பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை
உத்தமபாளையம், ஜன.10:
க.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.
க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
க.புதுப்பட்டி பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், பேரூராட்சி தலைவர் கண்மணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வரதராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவுகள் குறித்து நிர்வாக அதிகாரி குணசேகரன் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும். சாக்கடைகளில் கழிவுகள், பாலித்தீன் பைகளை கொட்டுவதாலும் இலைக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதாலும் துர்நாற்றம், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, வீடுகளில் வெளியேற்றப்படும் குப்பை, இலைகள், காய்கறி கழிவு, சாம்பல், கட்டிட இடிபாடுகள், உரிய வகையில் பாதுகாத்து பேரூராட்சி குப்பை வண்டி, தள்ளுவண்டியில் கொட்ட வேண்டும். கழிவுநீரை சாக்கடையில் மட்டுமே விட வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.