தினமலர் 27.07.2012
கடை உரிமம் ரத்து: மாநகராட்சி எச்சரிக்கை
அனுப்பர்பாளையம் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்து விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல், பேக்கரி, டீக்கடை என 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடை நடத்த ஒப்பந்தம் எடுத்தவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மீறி, பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இது, பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
அக்கடைக்காரர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றியது; தற்போது மீண்டும் ஆக்கிரமித்து உள்ளனர். மூன்று நாட்களில் பொருட்களை அகற்றாவிட்டால், கடையின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு, வைப்பு தொகை பறிமுதல் செய்யப்படும்; மறு ஏலமும் விடப்படும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.