தினமணி 10.08.2012
குடிநீர்த் தட்டுப்பாடு: முறைகேடாக தண்ணீர் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
களியக்காவிளை, ஆக. 9: களியக்காவிளை பேரூராட்சியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து, பொது குடிநீர்க் குழாயிலிருந்து, முறைகேடாக தண்ணீர் பிடிப்பவர்களிடமிருந்துரூ. 500 அபராதம் விதிக்க பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் டி.ஆர். ஆஷாடயானா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி. சுதீர்குமார் முன்னிலை வகித்தார்.
வார்டு உறுப்பினர்கள் சுனிதா, ஜி. அருள்ராஜ், விஜயகுமாரி, பத்மினி, சி. தேவராஜ், சதீஷ்சந்திரபிரசாத், வின்சென்ட், எம். ரிபாய், ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடந்த விவாதம் பின்வருமாறு:
வின்சென்ட்: பொது குடிநீர்க் குழாயிலிருந்து முறைகேடாக தண்ணீர் பிடிக்க பயன்படுத்தும் ஹோஸ் பைப்புகளை பறிமுதல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ. 500 அபராதம் வசூலிக்க வேண்டும் என்றார்.
இக்கருத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இப்பேரூராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க தனித் திட்டம் ஏற்படுத்தி, குழித்துறை தாமிரவருணி ஆற்றில் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய அரசை கேட்டுகொள்வது, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கேரளத்தைப் போல மாத ஊதியம் வழங்க கேட்பது, இப் பேரூராட்சிக்குள்பட்ட திருத்துவபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், பணியாளர்கள் தொழில் மற்றும் இதர வரிகளை குழித்துறை நகராட்சிக்கு செலுத்துவதால் களியக்காவிளை பேரூராட்சிக்கு ஏற்பட்டுவரும் நிதி இழப்பை சரி செய்துதர மாவட்ட கல்வித்துறையை கேட்பது மற்றும் பல்வேறு வார்டுகளில் சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.