தினமணி 10.08.2012
மீண்டும் திறக்கப்பட்டது டவுன் ஹால்
புது தில்லி, ஆக. 9: ஒருங்கிணைந்த முந்தைய தில்லி மாநகராட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டுவந்த டவுன் ஹாலில் இனி பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஹால் ஆறு மாதமாக, தில்லி மாநகராட்சியின் அலுவல் கூட்டங்களைத் தவிர, வேறு எதற்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக வடக்கு தில்லி மேயர் மீரா அகர்வால் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சர்வதேச அளவில் அறியப்படும் முக்கிய சந்தையாக சாந்தினி செüக் விளங்குகிறது. இங்கு ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளுக்குக் கூட்டம் நடத்துவதற்குப் போதுமான வசதி சாந்தினி செüக்கில் இல்லை.இதைக் கருத்தில் கொண்டு, டவுன் ஹாலில் உள்ள கூடங்களை வாடகைக்கு விடுவது என்று வடக்கு தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. டவுன் ஹாலில் உள்ள கூட்ட அரங்கில் கருத்தரங்கம், மாநாடு, பொது நிகழ்ச்சிகள், சிறிய அளவிலான கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும்.
இதற்கு வாடகையாகப் புதிய கூட்ட அரங்குக்கு நாள் ஓன்றுக்கு ரூ. 70 ஆயிரமும், அரை நாளுக்கு ரூ. 35 ஆயிரமும், பழைய கூட்ட அரங்குக்கு நாள் வாடகையாக ரூ. 35 ஆயிரமும், அரை நாள் வாடகையாக ரூ. 15 ஆயிரமும் வசூலிக்கப்படும் என்றார் மீரா அகர்வால். டவுன் ஹால் 1865-ம் ஆண்டு கட்டப்பட்டது.