தினமலர் 21.08.2012
குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை
தேவாரம்:வீட்டு குடிநீர் இணைப்பில்,மோட்டார் பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால், குடிநீர் ஆதாரங்களான முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால், பம்பிங் கிணறுகள் வறண்டுள்ளன. மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, உள்ளூரில் பம்பிங் செய்யப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. ஊராட்சிகளில் தொடர்ந்து குடிநீர் சப்ளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வீட்டு இணைப்பு பெற்றவர்கள்,மோட்டார் பொருத்தி நீர் எடுப்பதால், மேட்டுப் பகுதிகளில் சீரான சப்ளை இல்லை. இதனால் சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்படுகிறது. மோட்டார் பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மோட்டார்களை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிராமங்களில் ஒட்டப்பட்டுள்ளன.