Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைகளை காலி செய்யக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன்      04.09.2012

கடைகளை காலி செய்யக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை, : கடைகளை காலி செய்யக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம் மேட்டுப்பாளையம் ரோட்டில் மாநகராட்சி சார்பில் பூ மார்க்கெட் நடத்தப்படுகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் டெண்டர் எடுத்து கடைகளை நடத்தி வருகின்றனர். 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முறைப்படி டெண்டர் எடுக்காமல் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இது, மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தியும் பலனில்லை.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பூமார்க்கெட் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ரூ.3 கோடி செலவில் புதிதாக நவீன பூ மார்க்கெட் வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பூ வியாபாரிகள் இடம்பெயர்ந்து செல்லும்படி மாநகராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டு, கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுகள் பல கடந்துவிட்ட பிறகும் இதுவரை யாரும் புதிய வளாகத்துக்கு செல்லவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற மாநகர மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது. இதில், பூமார்க்கெட் வியாபாரிகளை பழைய இடத்திலிருந்து காலிசெய்து, புதிய இடத்துக்கு இடமாற்றம் செய்யவைப்பது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதை அமல்படுத்தும் வகையில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று முதல் பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அடுத்த 10 நாட்களுக்குள் கடைகளை இடமாற்றம் செய்யாவிட்டால் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டியது வரும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நோட்டீஸ் காரணமாக ஒருசில பூ வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி கூறுகையில், ‘‘பழைய பூமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய பூமார்க்கெட் வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு கடைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனாலும், அங்கு இடம்பெயர்ந்து செல்லாமல், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்து வருகிறார்கள். இனி, காலஅவகாசம் கொடுக்க முடியாது. அடுத்த பத்து நாட்களுக்குள் இடமாற்றம் செய்யாவிட்டால் காவல்துறை மூலம் அப்புறப்படுத்தப்படுவார்கள். முறைப்படி கடைகளை டெண்டர் எடுக்காத ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள்’’ என்றார்.
Last Updated on Tuesday, 04 September 2012 09:09