தினகரன் 04.09.2012
மாநகர 65 வார்டுகளிலும் மக்களின் புகார் மனுவுக்கு நேரில் சென்று நடவடிக்கை அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
திருச்சி, : மாநகரின் 65 வார்டுகளிலும் மக்கள் தரும் புகார் மனுவை நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பாதை ஆக்ரமிப்பு, சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், தெருவிளக்கு சீரமைப்பு, சாக்கடை தூர் வாருதல், கழிப்பிட பராமரிப்பு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெயா, குடிநீர் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். புகார் வரும் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநகர பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் அருணாச்சலம், நகர் நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.