தினகரன் 06.09.2012
40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் அபராதம்
தா.பேட்டை, : முசிறி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
முசிறி பேரூராட்சி பகுதிகளில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக், தூக்கு பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் விரிப்புகள் போன்ற பொருட்களை கடைகள் மற்றும் பொது இடங்களில் வியாபாரிகள் மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது.
இதனை மீறி வியாபாரிகள் விற்பனை செய்தாலும், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காத கடைகளுக்கும் முதல் எச்சரிக்கையாக ரூ.250ம், 2வது முறைக்கு ரூ.500ம், 3வது முறைக்கு ரூ.1000ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கினால் முறையே ரூ.100, ரூ.200, ரூ.500 என அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து செயல்பட்டால் கடைகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும், வியாபாரிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அபராதத்தொகை வசூலிக்கப்படும்.