தினமணி 17.02.2013
வாடகை நிலுவை: வணிக வளாககடைகள் மீது நடவடிக்கை
சாத்தான்குளம் பேரூராட்சியில் வரி செலுத்தப்படாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும், வாடகை நிலுவையுள்ள வணிக வளாகக் கடைகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் செயல் அலுவலர் முருகேசன் தெரிவித்தார்.
சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்றத் தலைவர் ஆ.செ.ஜோசப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரா.வீரக்குமார், செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவியாளர் பால்ராஜ் தீர்மானங்களை வாசித்தார். பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, செயல் அலுவலர் முருகேசன் கூறியதாவது, சாத்தான்குளம் பேரூராட்சியில் கிணற்று குடிநீர் இணைப்புகளில், 491 இணைப்புகளுக்கு வரி செலுத்தப்படாமல் உள்ளது. அதனை துண்டிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகக் கடையில் வாடகை நிலுவை ரூ.10 லட்சம் வரை உள்ளது. நிலுவை வைத்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வாரச்சந்தையில் அடிப்படை வசதி இல்லையென தினமணியில் செய்தி வந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சீரமைக்க உத்தரவிட்டுள்ளார் என்றார். கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் ஸ்டேன்லி, சதாசிவன், சரவணன், அழகுசுந்தரம், இந்திராபால்பாண்டி, ஜெ.ஜாக்குலின், இந்திராமாரிமுத்து, முகம்மது இஸ்மாயில், ஈஸ்வரன், ஜோசப் அலெக்ஸ், சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.