Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 18 பேர் தட்டச்சு தகுதி பெறாததால் பதவி இறக்கம் செய்து உத்தரவு

Print PDF
தினமலர்        26.03.2013

நெல்லை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 18 பேர் தட்டச்சு தகுதி பெறாததால் பதவி இறக்கம் செய்து உத்தரவு


திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய 18 பேர் தட்டச்சு தகுதி பெறாததால் பதவி இறக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி பணியாளர்களாக பலர் பணியாற்றிவருகின்றனர். இதில் பிளஸ் 2 கல்வித் தகுதியுள்ள 20 பேர் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் போது, தகுதிகாண் பருவம் நிறைவு பெறுவதற்குள் தட்டச்சு கல்வி பெறாவிடில் பணியில் இருந்து நீக்கப்படுவர் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இவர்களை பணி நியமனம் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சி உள்ளாட்சி நிதி உடனடி தணிக்கைத்துறை துணை இயக்குனர், "மாநகராட்சி கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், "தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றுபவர்களை செயல் திறனற்ற பணியாளர்களாக மட்டுமே நியமனம் செய்யலாம் என தெளிவுரை வழங்கியிருந்தார்'. ஆனால் மாநகராட்சி பணியாளர் பணி விதிகளுக்கு புறம்பாக 20 இளநிலை உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.ஆனால் 2006ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அரசு செயலாளர் அளித்த உத்தரவில் இளநிலை பணியாளர்கள் தட்டச்சு கல்வி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க கூடாது என கூறியிருந்தார்.இதற்கிடையே நெல்லை மாநகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக நிரந்தர பணியாற்றிய பொன்குமார் என்பவர், தனக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அவர் தட்டச்சு தகுதி பெறவில்லை என்பதை காரணம் காட்டி அவரது கோரிக்கை அப்போதைய கமிஷனரால் நிராகரிக்கப்பட்டது.

தினக்கூலி பணியாளர்கள், மாநகராட்சி விதிகளுக்கு புறம்பாக இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள போது, நிரந்தர துப்புரவு பணியாளராக பணியாற்றுபவருக்கு மட்டும் வாய்ப்பு எப்படி மறுக்கப்படுகிறது என்பதை அரசின் கவனத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு கொண்டு சென்றார். தமது புகாரில் விதிகளுக்கு புறம்பாக இளநிலை உதவியாளர் பணி நியமனத்தில் விலக்கு அளிக்க கூடாது என நகராட்சி நிர்வாகத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்ட நகலையும் இணைத்து அனுப்பியிருந்தார். இதற்கிடையே இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 2 பேர் தட்டச்சு பயிற்சி முடித்துவிட்டனர்.

இதனால் அவர்கள் இருவர் தவிர, இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 18 பேரை அந்த பதவியில் இருந்து பணி இறக்கம் செய்து அரசு செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.